வங்கி டெபாசிட்களுக்கு, அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மட்டுமே காப்பீட்டு தொகையாக கிடைக்கும் என்ற தகவல் ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது.
வங்கியில் நாம் வைத்திருக்கும் பணம் காணாமல் போனாலோ, வங்கி திவாலானாலோ, வங்கியில் பணம் தரமுடியாத சூழல் ஏற்பட்டாலோ, வங்கி உரிமம் ரத்தானாலோ வாடிக்கையாளர் பணத்துக்கு காப்பீடு குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பிடிஐ செய்தி நிறுவனம் கேட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கியின் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உறுதிக்கழகம் (டிஐசிஜிசி) வெளியிட்ட தகவலில், காப்பீடாக அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உறுதிக்கழகம் (டிஐசிஜிசி) வழங்கிய தகவலில், ''டிஐசிஜிசி சட்டம் 1961, பிரிவு 16(1)ன் கீழ், ஒரு வங்கி தனது வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த பணத்தைக் கொடுக்க இயலாமல் போகும்போது, அவர்களுக்கு டிஐசிஜிசி பணத்தை வழங்க கடமைப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு டெபாசிட்தாரருக்கும் அவர்கள் செய்துள்ள டெபாசிட் அடிப்படையில் அவர்கள் டெபாசிட் செய்துள்ள பணம், வட்டி ஆகியவற்றின் அடிப்படையில் ரூ.1 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.